சரியை விலக்கல்

பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை

அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும்வந் தணுகுமோ
செம்பொன் னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே

விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே

– சிவவாக்கியார்


மேலும் படிக்க : சிவவாக்கியார்

அந்திகாவலன்

வண்ணங்களாய் ஒளிர்ந்த அவனது பகலில்
விழுந்தது அந்த கொடிய இரவின் நஞ்சு.
தாயை பிரிந்த மழலையாய்
தன் சூரியனை இழந்து அழுகலானான்.

மின்மினிகளாய்,
அங்கும் இங்கும் என ஆறுதல் கூறிய
நட்சத்திரங்களையும் விழுங்கின
அந்த கோர இரவின் கருமேகங்கள்.

தன் பார்வை பறிபோனதோ
என்று அவன் அச்சம் கொள்ளுமளவிற்கு
இருள் பிரகாசிக்கச் செய்து
அவன் அக ஒளியை
கொஞ்சம் கொஞ்சமாய் அழித்தது
காலத்தை உறைய வைத்த அந்த இரவு.

இருள் உலகில் மூழ்கிய அவனைக் காக்க
சூரியனாய் உதித்தது  நிலவு.
இடிந்து நொறுங்கிய அவன் பகலை
தனியாய்த் தாங்கிப் பிடித்து நின்றது.

அந்த இரவின் கோரத்தை
மெல்ல மெல்ல தன் ஒளிக்கீற்றால் துரத்தி
தன் வடுக்களை மறைத்து
ஓர் பக்கத்தை மட்டும் காட்டி நின்றது
அந்த நிலவு.

பிறரின் வாழ்வில் இருளைப் போக்கும் அந்த நிலவு
தான் தினமும் தேய்வதையும்
தேய்ந்து மறைந்து மீண்டும் வளர்வதையும்
ஏனோ அவனிடமிருந்து மறைத்து
ஆறுதல் கூறியது.

– பிரதீப்


மேற்கோள் :

படம் : https://unsplash.com/search/photos/moon


விளக்கம் :

மேற்கு வானில் சூரியன் மறைந்து வானம் இருள்வது, இருண்ட வானத்தில் நட்சத்திரங்கள் மின்னுவது, சந்திரனின் ஓர் பக்கம் மட்டும் உலகிற்கு தெரிவது, சந்திரன் மாதம் தோறும் தேய்ந்து ஒளிர்வது போன்றவை இயற்கை நிகழ்வுகள். 

வாழ்வில் ஒளிக்காட்டிய ஒருவரின் மறைவு அந்த இருளிற்கு சமமானது. எத்தனை நட்சத்திரங்கள் ஆறுதல் கூறினாலும் அந்த ஒளிக்கு ஈடாகாது. அந்த இழப்பை குறைக்கும் வலிமை நிலவிற்கு மட்டும் உண்டு. யாரும் அறியா காயங்களை தன்னுள் மறைத்து கொண்டு ஆறுதல் கூறி ஒளிரும் வல்லமை உடையது அந்த நிலவு.

திருவருட்பா

சொல்அ வாவிய தொண்டர்தம் மனத்தில்
சுதந்த ரங்கொடு தோன்றிய துணையைக்
கல்அ வாவிய ஏழையேன் நெஞ்சும்
கரைந்து வந்திடக் கலந்திடும் களிப்பைச்
செல்அ வாவிய பொழில்திரு வொற்றித்
தேனைத் தில்லைச்சிற் றம்பலத் தாடும்
நல்ல வாழ்வினை நான்மறைப் பொருளை
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

அட்ட மூர்த்தம தாகிய பொருளை
அண்டர் ஆதியோர் அறிகிலாத் திறத்தை
விட்ட வேட்கையர்க் கங்கையில் கனியை
வேத மூலத்தை வித்தக விளைவை
எட்ட ரும்பர மானந்த நிறைவை
எங்கும் ஆகிநின் றிலங்கிய ஒளியை
நட்டம் ஆடிய நடனநா யகத்தை
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

உம்பர் வான்துயர் ஒழித்தருள் சிவத்தை
உலகெ லாம்புகழ் உத்தமப் பொருளைத்
தம்ப மாய்அகி லாண்டமும் தாங்கும்
சம்பு வைச்சிவ தருமத்தின் பயனைப்
பம்பு சீரருள் பொழிதரு முகிலைப்
பரம ஞானத்தைப் பரமசிற் சுகத்தை
நம்பி னோர்களை வாழ்விக்கும் நலத்தை
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

மாலின் உச்சிமேல் வதிந்தமா மணியை
வழுத்தும் நாஅகம் மணக்கும்நன் மலரைப்
பாலின் உள்இனித் தோங்கிய சுவையைப்
பத்தர் தம்உளம் பரிசிக்கும் பழத்தை
ஆலின் ஓங்கிய ஆனந்தக் கடலை
அம்ப லத்தில்ஆம் அமுதைவே தங்கள்
நாலின் ஒற்றியூர் அமர்ந்திடும் சிவத்தை
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

உண்ணி றைந்தெனை ஒளித்திடும் ஒளியை
உண்ண உண்ணமேல் உவட்டுறா நறவைக்
கண்ணி றைந்ததோர் காட்சியை யாவும்
கடந்த மேலவர் கலந்திடும் உறவை
எண்ணி றைந்தமால் அயன்முதல் தேவர்
யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை
நண்ணி ஒற்றியூர் அமர்ந்தருள் சிவத்தை
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

திக்கு மாறினும் எழுகடல் புவிமேல்
சென்று மாறினும் சேண்விளங் கொளிகள்
உக்கு மாறினும் பெயல்இன்றி உலகில்
உணவு மாறினும் புவிகளோர் ஏழும்
மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம்
விழுந்து மாறினும் வேதங்கள் உணரா
நக்கன் எம்பிரான் அருள்திருப் பெயராம்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

உடைஉ டுத்திட இடைமறந் தாலும்
உலகு ளோர்பசிக் குணமறந் தாலும்
படையெ டுத்தவர் படைமறந் தாலும்
பரவை தான்அலைப் பதுமறந் தாலும்
புடைஅ டுத்தவர் தமைமறந் தாலும்
பொன்னை வைத்தஅப் புதைமறந் தாலும்
நடைஅ டுத்தவர் வழிமறந் தாலும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

வன்மை செய்திடும் வறுமைவந் தாலும்
மகிழ்வு செய்பெரு வாழ்வுவந் தாலும்
புன்மை மங்கையர் புணர்ச்சிநேர்ந் தாலும்
பொருந்தி னாலும்நின் றாலும்சென் றாலும்
தன்மை இல்லவர் சார்பிருந் தாலும்
சான்ற மேலவர் தமைஅடைந் தாலும்
நன்மை என்பன யாவையும் அளிக்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

இன்னும் பற்பல நாளிருந் தாலும்
இக்க ணந்தனி லேஇறந் தாலும்
துன்னும் வான்கதிக் கேபுகுந் தாலும்
சோர்ந்து மாநர கத்துழன் றாலும்
என்ன மேலும்இங் கெனக்குவந் தாலும்
எம்பி ரான்எனக்கு யாதுசெய் தாலும்
நன்னர் நெஞ்சகம் நாடிநின் றோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

– வள்ளலார்



மேற்கோள் :

திருவருட்பா – இரண்டாம் திருமுறை

1. http://www.thiruarutpa.org/
2. http://www.tamilvu.org/ta/library-l5F31-html-l5F31ind-144969

காலத்தின் பரிசு

இந்த உலகத்தில் நீ எதை இழந்தாலும்,
உன் பொறுமையை இழக்காதே.
காலத்தின் ஆற்றலை உணர்ந்து,
அதனிடம் சரணடைவாயாக.

காலம்,
கடவுளின் படைப்பில், மனிதன்
அறிய இயலா ஓர் மகாசக்தி.
இன்பதுன்பமென்னும் மாயையை
நொடிப்பொழுதில் மாற்ற வல்லது.

பல ஆயிரம் ஆண்டுகளாய் பூமியின்
அழுத்தத்தையும் வெப்பத்தையும் தாங்கி நிற்கும்

வைரம் போல் இரு.

வைரத்தின் மதிப்பு, காலம்
அதன் பொறுமைக்குத் தந்த பரிசு.

– பிரதீப்